எஸ்.ஐ., பரசுராம் வீட்டில் எம்.எல்.ஏ., பரிந்துரை கடிதம்
எஸ்.ஐ., பரசுராம் வீட்டில் எம்.எல்.ஏ., பரிந்துரை கடிதம்
ADDED : ஆக 10, 2024 06:38 AM

யாத்கிர்: மரணம் அடைந்த எஸ்.ஐ., பரசுராம் வீட்டில் இருந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுாரின் பரிந்துரைக் கடித நகலை சி.ஐ.டி., அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
யாத்கிர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக இருந்தவர் பரசுராம், 34. கடந்த 2ம் தேதி திடீரென மரணம் அடைந்தார்.
யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா ஆகியோர், 30 லட்சம் ரூபாய் கேட்டு, அழுத்தம் கொடுத்ததுடன், ஜாதியை சொல்லித் திட்டியதால், மன உளைச்சலில் பரசுராம் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
எம்.எல்.ஏ., அவரது மகன் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவானது. அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் தந்தையும், மகனும் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் அவர்களை கைது செய்ய, போலீசார் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரிக்கும், சி.ஐ.டி., அதிகாரிகள் பரசுராம் குடும்பத்தினரிடம் விசாரித்து, தகவல் பெற்றுக் கொண்டனர்.
யாத்கிரில் போலீஸ் குடியிருப்பில் பரசுராம் தங்கி இருந்த, வீட்டில் நேற்று சி.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார் பெயர் கொண்ட பரிந்துரை கடித நகல் கண்டெடுக்கப்பட்டது.
யாத்கிர் போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவில் எஸ்.ஐ.,யாக பணியாற்ற, எம்.எல்.ஏ., கொடுத்த சிபாரிசு கடிதம் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த வீட்டின் ஒரு பெட்டியில் இருந்து 7.33 லட்சம் ரூபாய் ரொக்கம், பரசுராமின் வங்கிக்கணக்கு புத்தகங்கள், அவர் பயன்படுத்திய துப்பாக்கி, வாக்கி டாக்கிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
எம்.எல்.ஏ.,வுக்கு கொடுக்க, பலரிடம் மொபைல் போனில் பேசி, கடன் கேட்டதும் தெரியவந்துள்ளது.