எஸ்.ஐ., பரசுராம் வழக்கு எம்.எல்.ஏ., ஆபீசில் 'ரெய்டு'
எஸ்.ஐ., பரசுராம் வழக்கு எம்.எல்.ஏ., ஆபீசில் 'ரெய்டு'
ADDED : ஆக 10, 2024 11:17 PM
யாத்கிர்: எஸ்.ஐ., பரசுராம் மரண வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார் அலுவலகத்தில், சி.ஐ.டி., போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
யாத்கிர் சைபர் கிரைம் போலீஸ் நிலைய எஸ்.ஐ., பரசுராம், 34. கடந்த 2ம் தேதி இறந்தார்.
யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா கொடுத்த தொல்லை; ஜாதியை சொல்லித் திட்டியதால், பரசுராம் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
எம்.எல்.ஏ., - மகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவானது. அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
யாத்கிர் போலீஸ் குடியிருப்பில், பரசுராம் தங்கி இருந்த வீட்டில், நேற்று முன்தினம் சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
குற்றப்பிரிவில் எஸ்.ஐ.,யாக பணியாற்ற பரசுராமுக்கு, எம்.எல்.ஏ., கொடுத்த சிபாரிசு கடிதத்தின் நகல் கிடைத்தது. பணியிட மாற்றம் தொடர்பாக, எம்.எல்.ஏ.,வை, பரசுராம் அடிக்கடி சந்தித்துப் பேசியதும் தெரிந்தது.
இந்நிலையில் யாத்கிர் டவுன் லால்பகதுார் சாஸ்திரி சதுக்கத்தில் உள்ள, எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார் அலுவலகத்தில் நேற்று, சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
ஆனால் அங்கு இருந்து, எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ., அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

