சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி; எதிர்த்து கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு
சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி; எதிர்த்து கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஆக 19, 2024 12:24 PM

பெங்களூரு: நில மோசடி புகாரில் வழக்குத் தொடர அனுமதி அளித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 2022ம் ஆண்டு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. தன் மனைவிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தியதற்கு பதிலாக, இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சித்தராமையா விளக்கம் அளித்தாலும், கையகப்படுத்திய நிலத்தை விட, அதிக மதிப்பிலான மனைகளை பார்வதிக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார்
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர், சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தார். தொடர்ந்து, மைசூரை சேர்ந்த சினேகமயி கிருஷ்ணா என்ற சமூக ஆர்வலரும், முதல்வர் மீது கவர்னிடம் புகார் அளித்தார்.
ஐகோர்ட்டில் வழக்கு
ஊழல் தடுப்பு சட்டம் 17வது பிரிவின் கீழ், சித்தராமையாவிடம் விசாரணை நடத்த, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். கர்நாடகா கவர்னரின் உத்தரவுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. முதல்வர் சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராக இருக்கிறார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
கர்நாடகா கவர்னரைக் கண்டித்து, அம்மாநிலத்தில் ஆளும் காங்.,கட்சியினர் போராட்டம் நடத்தினர்.பெங்களூரு பிரீடம் பார்க்கில் நடந்த போராட்டத்தில் துணை முதல்வர் சிவக்குமார், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

