ADDED : ஜூலை 18, 2024 05:01 AM

சித்ரதுர்கா: ''முதல்வர் சித்தராமையா பொய் பேசவே மாட்டாரா, அவர் என்ன ஹரிச்சந்திரனா,'' என்று, பா.ஜ.,- - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் கேள்வி எழுப்பினார்.
சித்ரதுர்கா பா.ஜ.,- - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மூடாவில் நடந்த முறைகேடுகளுக்கு முதல்வர் சித்தராமையா நேர்மையாக பதில் அளிக்க வேண்டும். பா.ஜ.,வினரை பொய் பேசுவதில் வல்லவர்கள் என்று சித்தராமையா அடிக்கடி கூறுவார். அவர் பொய்யே பேச மாட்டாரா. அவர் என்ன ஹரிச்சந்திரனா.
காங்கிரசுக்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி கிடைக்கவில்லை. வினய் குல்கர்னி உட்பட 50 எம்.எல்.ஏ.,க்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். இவர்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

