பிரஜ்வலை இந்தியா கொண்டு வர மோடிக்கு சித்தராமையா கோரிக்கை
பிரஜ்வலை இந்தியா கொண்டு வர மோடிக்கு சித்தராமையா கோரிக்கை
ADDED : மே 02, 2024 02:25 AM

பெங்களூரு :'பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்' என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார். 'சர்வதேச போலீசார் உதவியுடன், ஜெர்மனியில் இருந்து பிரஜ்வலை, இந்தியா அழைத்து வர வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்து உள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹாசன் தொகுதி ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி உள்ளார்.
கடிதம்
இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. பிரஜ்வல், இப்போது ஜெர்மனியில் உள்ளார். வழக்கிற்கு பயந்து தப்பிச் சென்றதாக, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.
'மத்திய அரசு உதவியுடன், பிரஜ்வல் ஜெர்மன் சென்றார்' என்று, முதல்வர் சித்தராமையாவும் கூறி உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா நேற்று எழுதிய கடிதம்:
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், ஹாசன் சிட்டிங் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பற்றி, நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நாட்டை உலுக்கிய பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான வழக்கை, பிரஜ்வல் எதிர்கொண்டு உள்ளார்.
எங்கள் அரசு இந்த வழக்கை விசாரிக்க, சி.ஐ.டி.,யின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைத்து உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், பிரஜ்வல் மீது கடந்த 28ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பிரஜ்வல் ஜெர்மனியில் இருப்பதால், விசாரணை நிலுவையில் உள்ளது. மத்திய வெளியுறவு துறை, பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதுடன், சர்வதேச போலீஸ் உதவியுடன், ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர, நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் வழங்க, சிறப்பு விசாரணைக் குழு தயாராக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விசாரணைக்கு மறுப்பு
இதற்கிடையில், 24 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணாவுக்கு நேற்று முன்தினம், சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் ஹாசனில் இருந்தும், ரேவண்ணா ஆஜராகவில்லை.
பிரஜ்வல் தன் முகநுால் பக்கத்தில், 'பெங்களூரில் இருந்தால் விசாரணைக்கு ஆஜராகி இருப்பேன். இப்போது ஜெர்மனியில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை. வாய்மையே வெல்லும்' என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வலுக்கு ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கும்படி, விசாரணை அதிகாரி பிரிஜேஷ்குமார் சிங்கிற்கு, பிரஜ்வலின் வக்கீல் கடிதம் எழுதி உள்ளார்.

