தண்ணீர் குழாய்களில் சல்லடை கருவிகள் குடிநீரை சிக்கனப்படுத்த வாரியம் நடவடிக்கை
தண்ணீர் குழாய்களில் சல்லடை கருவிகள் குடிநீரை சிக்கனப்படுத்த வாரியம் நடவடிக்கை
ADDED : ஏப் 05, 2024 11:22 PM

பெங்களூரு: ''இஸ்ரோ, லோக் ஆயுக்தா உட்பட பல அரசு அலுவலகங்களில் இதுவரை 4,000 குழாய்களில் 'ஏரேட்டர்கள்' பொருத்தப்பட்டு உள்ளன,'' பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை தொடருகிறது. கோடைகாலத்தில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த, குடிநீர் வாரியம் முன்னுரிமை அளித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழாய்களில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த, 'ஏரேட்டர்'கள் எனும் சல்லடை கருவிகள் பொருத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
பொது மக்கள் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள், இஸ்ரோ, மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள குழாய்களில் இக்கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
மால்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், சொகுசு விடுதிகள், உணவகங்கள், மத வழிபாட்டு தலங்கள் உட்பட பொது இடங்களில் உள்ள குழாய்களில், ஏரேட்டர் பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளோம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் கட்டாயம் பொருத்தப்படுகிறது. பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில், பெங்களூரு ஜல் மண்டலின் அனைத்து அலுவலகங்களிலும் ஏரேட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இரண்டாம் கட்டமாக நகரின் முக்கிய அரசு அலுவலகங்களான பி.டி.ஏ., - பி.எஸ்.என்.எல்., இந்திரா உணவகம், வருமான வரி, பெங்களூரு மாநகராட்சி, அரசு பள்ளிகள், இஸ்ரோ, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம், எச்.ஏ.எல்., பெமல், சில்க் போர்டு, சென்ட்ரல் ஹவுஸ், பாதுகாப்பு அலுவலகங்கள்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கம், ஆர்.டி.ஓ., மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையம், ஜெயதேவா மருத்துவமனை, மத்திய மருந்தகம், ஐ.டி.ஐ., நிறுவனம், மத்திய மருந்தகம், லோக் ஆயுக்தா, கே.பி.டி.சி.ஐ.எல்., - கே.எம்.பி., பெஸ்காம், கார்சன் பொறியியல் கட்டடங்கள் ஆகிய இடங்களில், 4,000 ஏரேட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.

