ADDED : ஜூன் 14, 2024 12:26 AM
கேங்டாக், சிக்கிம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த பிரேம் சிங் தமங் மறுபடியும் பதவியேற்றார்.
இவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், தன்னை எதிர்த்து போட்டி யிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் பீமல் ராயை வீழ்த்தி, நாம்சி சிங்கிதாங்க் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வானார்.
நேற்று முன்தினம் கிருஷ்ண குமாரி ராய், எம்.எல்.ஏ.,வாகவும் பதவி யேற்றார். இந்நிலையில், நேற்று திடீரென தன் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
ஏன் ராஜினாமா செய்தார் என்ற விபரம் தெரியவில்லை. அவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகல் குறித்து கேட்க கிருஷ்ண குமாரி ராயையோ, அவர் சார்ந்த கட்சி நிர்வாகிகளையோ தொடர்புகொள்ள முயன்றும் பலனில்லை.
முதல்வர் மனைவியின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.