ADDED : மார் 26, 2024 06:39 AM

பெங்களூரு: மேகதாது திட்டத்தை செயல்படுத்தும் வாக்குறுதியை, தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்த, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவை, துணை முதல்வர் சிவகுமார் பாராட்டினார்.
கர்நாடகாவில் வறட்சி சூழ்ந்துள்ளது. பெங்களூரு உட்பட பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
'மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்' என, துணை முதல்வர் சிவகுமார் சபதம் செய்துள்ளார். இதற்கிடையில், மேகதாது திட்டத்தை செயல்படுத்தும் வாக்குறுதியை, ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக, தேவகவுடா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இவரை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமார் பாராட்டியுள்ளார்.
இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:
மேகதாது திட்டத்தை வலியுறுத்தி, பாதயாத்திரை நடத்தினோம். 'நமது நீர் நமது உரிமை' போராட்டத்துக்கு ஆதரவாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா குரல் கொடுத்திருப்பதை பாராட்டுகிறேன்.
எங்களின் உரிமை போராட்டம், கன்னடர்களின் வீடு, வீடாக சென்றடைந்தது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் நீர்ப்பாசன துறை அமைச்சராக பொறுப்பேற்றேன்.
இத்திட்டத்தை செயல்படுத்தும், எங்களின் சட்ட போராட்டம் நீடிக்கும். எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை, மனதில் கொண்டாவது மத்திய அரசு, மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

