சமூக ஆர்வலர் கொலை வழக்கு பா.ஜ., முன்னாள் எம்.பி., விடுவிப்பு
சமூக ஆர்வலர் கொலை வழக்கு பா.ஜ., முன்னாள் எம்.பி., விடுவிப்பு
ADDED : மே 06, 2024 11:49 PM

ஆமதாபாத்,: குஜராத்தில், சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா கொலை வழக்கில் இருந்து, பா.ஜ., முன்னாள் எம்.பி., டினு சோலங்கி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் பா.ஜ., - எம்.பி.,யாக இருந்த டினு சோலங்கி, 67, தொடர்புடையதாக கூறப்படும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், அமித் ஜெத்வா என்பவர் தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார்.
இவர், 2010 ஜூலை 20ல், குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை, 2012 செப்டம்பரில், சி.பி.ஐ.,க்கு குஜராத் உயர் நீதிமன்றம் மாற்றியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2013 நவம்பரில், டினு சோலங்கி, அவரது மருமகன் சிவ சோலங்கி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
கடந்த 2019 ஜூலையில் டினு சோலங்கி, அவரது மருமகன் சிவ சோலங்கி உட்பட ஏழு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், 2021 செப்டம்பரில், டினு சோலங்கியின் தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா, விமல் கே.வியாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
இந்த வழக்கில் முழு விசாரணையும் செயலற்றதாக உள்ளது. வெறும் பெயரளவுக்கு விசாரணை நடந்துள்ளது. சாட்சிகளின் நம்பிக்கையைப் பாதுகாக்க அரசு தரப்பு தவறிவிட்டது.
இதனால், பா.ஜ., முன்னாள் எம்.பி., டினு சோலங்கி, அவரது மருமகன் சிவ சோலங்கி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2019 ஜூலையில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.