ADDED : ஜூன் 20, 2024 02:30 AM
சீலம்பூர்: உதிரிபாகங்கள் வினியோகிக்கும் 48 வயது வியாபாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
வடகிழக்கு டில்லியின் வெல்கம் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் ஜி.டி., சாலையில், செவ்வாய்க்கிழமை இரவு 9:40 மணி அளவில், 48 வயது நபர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை அப்பகுதியினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். இரவு 11:23 மணி அளவில் அந்த நபர் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்டவர் மனோஜ் குமார், 48, என்பதும் ஷாஹ்தாராவில் வசிக்கும் அவர், காஷ்மீரி கேட் சந்தையில் உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் வியாபாரி என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை அடையாளம் காண போலீசார் முயன்று வருகின்றனர். மனோஜ்குமாருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.