ADDED : ஜூலை 04, 2024 01:25 AM
ஸ்ரீநகர்,கோல்கட்டாவை விட காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
குளுகுளு காஷ்மீர் தற்போது வெப்ப அலையின் பிடியில் சிக்கி தவிக்கிறது. நேற்று முன்தினம் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, 34.6 டிகிரி செல்ஷியஸாக பதிவானது.
இது கோல்கட்டாவில் அன்றைய தினம் பதிவான 31 டிகிரி செல்ஷியசை விட அதிகம்.
இதன் வாயிலாக ஸ்ரீநகரில் இந்த சீசனில் அதிகபட்ச வெப்பம் நேற்று முன்தினம் வீசியது. கடந்த 10 ஆண்டுகளில், ஜூலை மாதத்தில் ஸ்ரீநகரில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை இது.
முன்னதாக கடந்த 2021 ஜூலை 18ல் அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியிருந்தது.
இது தவிர காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு இடங்களில் வழக்கத்தை விட, 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்ரீநகர் மட்டுமின்றி குப்வாராவிலும் கடந்த 1ம் தேதி அதிகபட்சமாக 34.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. தெற்கு காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில், 34 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.
காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பநிலை நிலவுவதால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.
மேலும் பள்ளிகளுக்கு ஜூலை 8 முதல் 10 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.