ADDED : மே 31, 2024 12:26 AM
புதுடில்லி: இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மீறியது மிகப் பெரிய தவறு என்று, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியுள்ளது குறித்து, 'உண்மை வெளிவருகிறது' என, நம் வெளியுறவுத் துறை கருத்து தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், 1999ல் அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இதில் கையெழுத்திட்டனர்.
ஆனால், அதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீற முயன்றது. அதை, நம் படைகள் முறிஅடித்தன.
சமீபத்தில் லாகூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நவாஸ் ஷெரீப், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மீறியது மிகப் பெரிய தவறு என்று பேசினார்.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''நம்முடைய நிலைப்பாடு இதில் தெளிவாக உள்ளது. இதை பலமுறை நாம் வலியுறுத்திஉள்ளோம். பாகிஸ்தானில் தற்போது தான் இதில் உண்மை வெளிவரத் துவங்கியுள்ளது,'' என்றார்.