ADDED : மே 05, 2024 12:01 AM
ஆக்ரா :உத்தர பிரதேசத்தில் சென்ற விரைவு ரயில், பச்சை விளக்கு சிக்னலுக்காக ஏராளமான பயணியருடன் அரை மணி நேரம் காத்திருந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. முதற்கட்ட விசாரணையில், ஸ்டேஷன் மாஸ்டர் உறங்கியதால் இந்த காலதாமதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
பீஹாரின் பாட்னாவில் இருந்து ராஜஸ்தானின் கோட்டாவிற்கு நேற்று முன்தினம் 1,000த்துக்கும் மேற்பட்ட பயணியருடன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது.
இந்த ரயில், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா அருகே உதி மோர் ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது, ரயில் ஸ்டேஷனுக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கும் பச்சை நிற சிக்னல் எரியவில்லை.
இதன் காரணமாக, இன்ஜின் டிரைவர் ரயிலை அங்கேயே நிறுத்தி வைத்தார். அரை மணி நேரத்திற்கு பின் பச்சை நிற சிக்னல் எரிந்தது. அதன்பின் ரயில் புறப்பட்டு சென்றது.
இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து, ஆக்ரா ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது.
முதற்கட்ட விசாரணையில், அந்த நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் அயர்ந்து உறங்கியதால், சிக்னல் பிரச்னை எழுந்தது தெரியவந்தது.
இதனால், பணியின் போது அஜாக்கிரதையாக இருந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.