'விநாயகர் சதுர்த்திக்கு கட்டாய வசூல் செய்தால் கடும் நடவடிக்கை'
'விநாயகர் சதுர்த்திக்கு கட்டாய வசூல் செய்தால் கடும் நடவடிக்கை'
ADDED : ஆக 30, 2024 11:51 PM

பெங்களூரு:
''விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கட்டாய நன்கொடை வசூலித்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
1. விநாயகர் சிலைகளை, பொது இடத்தில் வைப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், வாகன நெரிசல் மிகுந்த சாலையிலும் வைக்கக் கூடாது
2. சட்டத்துக்கு புறம்பாக, யாரிடமும் கட்டாயமாக நன்கொடை வசூலித்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
3. ஷாமியானா போடுவதற்கு, பெங்களூரு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்
4. எந்த காரணத்துக்கும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் வைக்கக்கூடாது. சிலை வைக்கப்படும் பகுதியின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும்
5. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது. 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும்
6. கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே வைக்க வேண்டும்
7. அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு 24 மணி நேரமும் கண்காணிக்க, இரண்டு பொறுப்புள்ள நபர்கள், சிலை உள்ள இடத்தில் இருக்க வேண்டும். அவர்களின் விபரத்தை, போலீசில் தெரிவிக்க வேண்டும்
8. தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கியஸ்தர்களின் மொபைல் எண்களை, அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்ட வேண்டும்
9. மின் அலங்காரம் செய்வதற்கு, பெஸ்காம் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்
10. சிலை வைக்கப்பட்ட இடத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும், விழா ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு
11. பெண்களை சீண்டுவது, தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்தாலும், விழா ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு
12. முதியோர், பள்ளி மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில், காலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை மட்டுமே, போலீஸ் அனுமதி பெற்று ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது
13. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பதற்றமான இடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் முன் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது
14. இரவு 10:00 மணிக்குள், ஊர்வலத்தை முடித்து, குறிப்பிட்ட இடத்தில் சிலைகளை கரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.