ADDED : ஏப் 20, 2024 12:56 AM
வடக்கு லக்கிம்பூர், அசாமில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற சொகுசு கார் நீரில் மூழ்கியது. இதனால், அந்த இயந்திரம் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதற்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
இங்கு, காலை 7:00 மணி முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வந்தனர்.
இந்நிலையில், லக்கிம்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அமர்பூரில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையொட்டி, லக்கிம்பூர் லோக்சபா தொகுதிக்கு மாற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, சொகுசு காரில் தேர்தல் அதிகாரிகள் உடனே அனுப்பினர்.
எனினும், தியோபானி நதியை கடக்க முயன்றபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சொகுசு கார் நீரில் மூழ்கியது.
அதில் வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சேதம் அடைந்தது.
இதையடுத்து, மாற்று இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

