நட்சத்திர ஹோட்டல்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
நட்சத்திர ஹோட்டல்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 23, 2024 10:24 PM
பெங்களூரு: பெங்களூரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் போலீசார் உஷாராகி உள்ளனர்.
பெங்களூரில் சமீப நாட்களாக பிரபலமான பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலீசாரும் அங்கு சென்று சோதனை நடத்தினர். அது வதந்தி என்பது தெரிந்தது.
இந்நிலையில், பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஓடேரா ஹோட்டல் உட்பட மூன்று 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு, நேற்று அதிகாலை இ - மெயில் வழியாக, வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
காலையில் இ - மெயிலை, ஊழியர்கள் பார்வையிட்ட போது, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிந்து.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் அந்தந்த ஹோட்டல்களில் சோதனை நடத்தினர்.
ஒரு இடம் கூட விடாமல் தேடினர்; எங்கும் வெடிகுண்டு இல்லை. இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது.
வெடிகுண்டு மிரட்டலால் ஹோட்டல்கள் முன் பதற்றமான சூழ்நிலை உருவானது.
ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களுக்கு, போலீசார், ஊழியர்கள் தைரியமூட்டினர். முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.