சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை
சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை
ADDED : ஏப் 23, 2024 09:30 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியின் சில பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் டில்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டில்லியில் நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. பகல் முழுதும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் வானிலை சட்டென்று மாறியது.
பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் செடி மற்றும் மரங்கள் சரிந்தன. மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. குடிசைகளில் வசிப்போர் சற்று அச்சம் அடைந்தனர்.
காலையில் காற்றில் ஈரப்பதம் 28 முதல் 66 சதவீதம் வரை இருந்தது. டில்லியில் இன்றும் பலத்த காற்று வீசும் எனவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதுடில்லி அருகே ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமைப் பயிர்கள் நீரில் மூழ்கின.

