ADDED : செப் 03, 2024 10:55 PM

பெங்களூரு : “நீங்கள் என்ன சத்ய ஹரிச்சந்திரனா?” என, பா.ஜ., - எம்.பி., சுதாகருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ஜ., ஆட்சியில் கொரோனா வேளையில் நடந்த ஊழல் தொடர்பான, இடைக்கால அறிக்கையை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்தார்.
கொரோனா ஊழலில் முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சிக்பல்லாப்பூர் பா.ஜ., -- எம்.பி.,யுமான சுதாகருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சுதாகர், “காங்கிரசில் யாரும் ஊழல் செய்யவில்லையா. அவர்கள் அனைவரும் சத்ய ஹரிசந்திரனா?” என கேட்டார்.
இதுகுறித்து சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
கடந்த 2013 சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட, எங்கள் கட்சியின் முனி ஆஞ்சனப்பாவுக்கு சீட் கிடைக்க இருந்தது. ஆனால், அவரது வாய்ப்பை சுதாகர் தட்டிப் பறித்தார்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்ததில் சுதாகருக்கும் பங்கு உண்டு.
காங்கிரசில் இருக்கும் வரை நல்ல கட்சி. பா.ஜ.,வுக்கு போனவுடன், காங்கிரஸ் மோசமான கட்சியா? எங்களை விமர்சனம் செய்யும் சுதாகர், சத்ய ஹரிசந்திரனா?
கொரோனா ஊழல் தொடர்பாக விசாரணை ஆணையம் உரிய நேரத்தில், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். சிக்கபல்லாபூர் எம்.எல்.ஏ.,வாக சுதாகர் இருந்தபோது, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் பா.ஜ., 30 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்றது.
நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, பா.ஜ., கூட்டணியால் வெறும் 19,000 ஓட்டுகள் தான், கூடுதலாக பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.