போராட்டம் போதும்; வேலைக்கு வாங்க: டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!
போராட்டம் போதும்; வேலைக்கு வாங்க: டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!
ADDED : ஆக 22, 2024 12:08 PM

புதுடில்லி: கோல்கட்டா டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவிட்டது.
மர்ம நபர்கள்
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், கடந்த, 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த மருத்துவமனையை சூறையாடினர். சம்பவத்தை கண்டித்தும், உரிய பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவு படி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
விசாரணை
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ' கோல்கட்டா மருத்துவக் கல்லுாரி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேற்கு வங்க அரசின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. வழக்கு விசாரணை அறிக்கையை சி.பி.ஐ., சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* கோல்கட்டா டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.
* போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. டாக்டர்கள் பணிக்கு மீண்டும் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
* டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு ஒன்று அமைக்க வேண்டும். டாக்டர்கள் பணிக்குத் திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவர்.
* டாக்டர்கள் வருகைப்பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் கூற முடியாது. மனிதாபிமானமற்ற முறையில் டாக்டர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுகின்றனர்.
* டாக்டர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அறிக்கை தாக்கல்
இதற்கிடையே, கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவு படி, வழக்கை விசாரணை நடத்தி சி.பி.ஐ., இன்று அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.