ADDED : மே 07, 2024 06:26 AM

கலபுரகி: ''கர்நாடகாவில் தலிபான் ஆட்சி இருந்தால், உங்களால் சுதந்திரமாக பேச முடியுமா,'' என்று, பா.ஜ., - எம்.பி., உமேஷ் ஜாதவிற்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பினார்.
கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, கலபுரகியில் அளித்த பேட்டி:
கலபுரகி கொத்தனுாரில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கை, பா.ஜ.,வினர் அரசியல் ஆக்க பார்க்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் கலபுரகி பா.ஜ., - எம்.பி., உமேஷ் ஜாதவ், யாரை வைத்து என்னென்ன செய்தார் என்று, எனக்கு தெரியும். கர்நாடகாவில் தலிபான் ஆட்சி இருப்பதாக கூறுகிறார். அப்படி ஒரு ஆட்சி நடந்தால், உங்களால் சுதந்திரமாக பேச முடியுமா.
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், சிறப்பு விசாரணை குழுவினர் தங்கள் வேலையை செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வாங்கி கொடுப்பது அரசின் பொறுப்பு. இந்த வழக்கு தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்ட நடைமுறை தெரியாமல் பேசுகிறார். நல்ல வேளை, அவர் தமிழகம் சென்றது நல்லது. இல்லாவிட்டால் கர்நாடகாவில் திறமையற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி இருந்திருப்பார்.
கல்லுாரி மாணவி நேஹா கொலை வழக்கில் காட்டிய ஆர்வத்தை, ஹாசன் வழக்கில் பா.ஜ.,வினர் ஏன் காட்டவில்லை. பிரஜ்வல் தவறு செய்து உள்ளார் என்று தெரிந்தும், அவருக்கு 'சீட்' கொடுத்தது ஏன். அவரை கைது செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.