அரசியல் கட்சிகளுடன் பேசுங்கள்: தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
அரசியல் கட்சிகளுடன் பேசுங்கள்: தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 05, 2025 06:29 AM

புதுடில்லி : தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அரசியல் கட்சிகளுடன், அந்தந்த நிலையில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அடிக்கடி ஆலோசனை நடத்த வேண்டும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
'இவ்வாறு ஒரே எண் இருந்தாலும், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட விபரங்களில் வேறுபடும். அதனால், போலியாக வாக்காளர் சேர்க்கப்படுவதாகக் கூற முடியாது' என, தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில், 18 வயது நிரம்பியவர்களை சேர்ப்பதில் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நிலைகளில் உள்ள தேர்தல் அதிகாரிகள், ஊழியர்களுக்கு, தேர்தல் தொடர்பான பயிற்சிகள் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். சில ஆலோசனைகளை கட்சிகள் வழங்கலாம். இவை தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் மாற்ற உதவும். அதனால், அரசியல் கட்சிகளுடன், மாவட்ட, மாநில நிலைகளில் அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி, கட்சிகளின் கருத்துகளை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.