மாணவர்கள் நலனுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் ஆசிரியர்கள்
மாணவர்கள் நலனுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் ஆசிரியர்கள்
ADDED : செப் 06, 2024 06:09 AM

ஒரு மாணவர், சிறந்த தலைவராக உயர்வதற்கு, ஆசிரியரின் வழிகாட்டுதலும், ஊக்கமும் உறுதுணையாக இருக்கும். அத்தகைய ஆசிரியரை போற்றி மகிழும் ஆசிரியர் தின விழா, கர்நாடகாவில் நேற்று கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.
அனைத்து, பள்ளி, கல்லுாரிகளிலும் ஆசிரியர்களுக்கு ரோஜா மலர், சாக்லேட் வழங்கி மாணவர்கள் கொண்டாடினர். கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
மற்றொரு புறம் மாநில அரசு சார்பில், பெங்களூரு விதான் சவுதாவில், 31 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை முதல்வர் சித்தராமையா வழங்கினார்.
அந்த வகையில், மாணவர்களின் நலனுக்காக தன்னலம் பார்க்காமல் உழைக்கும் சில ஆசிரியர்கள் பற்றி இங்கே அறியலாம்.
ஆசிரியர்கள் உதிர்க்கும் மணிமுத்துகள்
* மதிக்கும் மாண்பு
மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பது மட்டும், ஆசிரியர்கள் கடமை இல்லை. அவர்கள் நல்லவர்களாக வாழ ஒழுக்கத்தையும், அடுத்தவர்களை மதிக்கும் மாண்பையும் கற்று தர வேண்டும். ஒருவர் வாழ்வில் வழிதவறி சென்றால், நீ எந்த ஆசிரியரிடம் பாடம் கற்று கொண்டாய் என்று தான், முதலில் கேட்பர். ஆசிரியர்கள் தான் முதல் படிக்கட்டாக இருக்க வேண்டும்.
சீனிவாஸ்,
ஸ்ரீமஞ்சுநாதா கிராமிய மேல்நிலைப்பள்ளி,
மேலலகுண்டே கிராமம்.
*ஊக்கம் தரும்
ஆசிரியர் தொழில் என்றால், முதலில் மிகவும் பொறுமை தேவை. ஒவ்வொன்றுக்கும் தினங்கள் கொண்டாடும்போது, ஆசிரியர் தினமும் கொண்டாடுவது மகிழ்ச்சி. இது ஆசிரியர்களுக்கு ஊக்கம் தரும். நம்மிடம் படிக்கும் மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்று, ஒரு நாளில் நம்மை பார்க்கும் போது, சார், உங்களால் தான் இந்த நிலைக்கு சென்றேன் என்று சொல்வதை கேட்கும் போது வரும் ஆனந்தம், வேறு எதிலும் இல்லை.
மஞ்சுநாத்,
தனியார் பள்ளி ஆசிரியர்,
அக்ரஹாரா தாசரஹள்ளி
ஒழுக்கத்தின் அடையாளம்
மாணவர்களுக்கு கல்வியறிவு புகுட்டுவது மட்டும் ஆசிரியர்கள் கடமையல்ல. நாளைய ஆசிரியர்களாக உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் ஒழுக்கத்தின் அடையாளமாக விளங்க வேண்டும். நாங்கள் மாணவர்களாக இருந்து, எங்கள் ஆசிரியர்களிடம் கற்ற பாடமே, ஆசிரியர் தகுதிக்கு வந்திருக்கிறோம் ஆசிரியர்கள் தினம் மகிழ்ச்சியை தருகிறது.
-நரசிம்ம மூர்த்தி,
ஆசிரியர், அரசு இளநிலை கல்லுாரி
தலைவர், தங்கவயல் அரசு ஊழியர்கள் சங்கம்
சமுதாய அடித்தளம்
ஆசிரியர்கள் தினம், மேன்மையான பெருமையை அளிக்கிறது. எத்தகைய உயர்வான தகுதிக்கு சென்றாலும், ஆசிரியர்களின் ஆசி தான், அவர்களுக்கெல்லாம் அடித்தளம். வீட்டில் இருக்கும் ஓரிரு குழந்தைகளுக்கு தான் தந்தை, தாயாக இருந்து நேசிக்க முடியும். ஆனால், பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளையுமே, தம் பிள்ளைகளாக நேசிக்கிற வரம் பெற்றிருக்கிறோம். ஆசிரியர் என்போர் அடித்தளம்.
-சீனிவாச மூர்த்தி,
ஆசிரியர், அரசு தொடக்கப் பள்ளி,
கண்ணேர ஹள்ளி.
கண்டிப்பு, கனிவு
குரு இல்லாமல் எந்த முன்னேற்றத்துக்கும் வழியே கிடையாது. அறிவுரை வழங்க வேண்டும். கண்டிப்பும், கனிவும் என இரண்டுமே சமமாகஇருக்க வேண்டும். மாணவர்களை ஒழுக்கம் உள்ளவராக உருவாக்கும் சிற்பி வேலையை செய்ய வேண்டும். சில நேரங்களில் மாணவர்களின் பார்வையில், ஆசிரியர்கள் வில்லனாக கூட தெரிய வரலாம். ஆயினும், அவர்களை நேர்வழியில் செல்ல வைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.
கிருஷ்ண மூர்த்தி, ஆசிரியர்,
அரசு தொடக்கப்பள்ளி, குருபூர்
கண்கண்ட தெய்வம்
ஆசிரியர் பணியில் 29 ஆண்டுகள் சேவை. நகர பகுதிக்கு நிகராக கிராம பகுதிகளில் கல்வி வேரூன்றி விட்டது. ஒவ்வொரு ஆசிரியரும், கல்வித் துறையில் பல்வேறு சிரமங்களை தாங்கி, மாணவர்களை மேல் நிலைக்கு கொண்டு வர பாடுபடுகின்றனர். மற்ற தொழிலில் லாப நோக்கம் இருக்கும். ஆசிரியர் தொழில் அப்படி அல்ல. எங்களின் ஆசிரியர் இன்றும், எனக்கு கண்கண்ட தெய்வம் தான்.
-கேசவ ரெட்டி,
ஆசிரியர், அரசுப்பள்ளி,
திம்மாபுரா
6_Vijayalakshmi
நாளைய பாரதம் உருவாவது மாணவர்களின் கைகளில் தான் உள்ளது. அன்றாடம் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று ஆசிரியராக மாணவர்களுக்கு உணர்த்தி வருகின்றோம். இதை கேட்டு, நாங்களும் நாட்டு வளர்ச்சிக்கு உழைப்பேன் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.
விஜயலட்சுமி,
தலைமை ஆசிரியை,
அரசு தமிழ் உயர்நடுநிலைப்பள்ளி,
ஆனந்தபுரம், ஜீவன்பீமாநகர்.
6_Sarala
ஆசிரியர் என்பது இறைபணியா, அனைவருக்கும் தெரிந்தவராக இருக்க வேண்டுமா, மாணவர்களுக்கு பாடம் மட்டுமே நடத்த வேண்டுமா, நாட்டு நடப்பு தெரிந்திருக்க வேண்டுமா, மாணவர்களின் தனித்திறமை அறிந்து பாடம் நடத்த வேண்டுமா உட்பட பல கேள்விகள் தனக்கு பதில் தெரியும் என்ற கர்வம் இல்லாமல், தினமும் கற்றுகொண்டு, கற்று கொடுப்பவர்களாக இருப்பவர்களே ஆசிரியர்கள்.
சரளா,
தமிழ்ப் பேராசிரியை,
செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம், சாந்திநகர்
- நமது நிருபர் -