பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ... பற்றி எரியும் தெலங்கானா!
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ... பற்றி எரியும் தெலங்கானா!
UPDATED : செப் 05, 2024 07:45 AM
ADDED : செப் 05, 2024 07:35 AM

ஆஷிதாபாத்: பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கலவரம் ஏற்பட்டுள்ளதால், தெலங்கானாவில் பதற்றம் நிலவி வருகிறது.
கலவரம்
ஆஷிபாபாத் மாவட்டத்தில் 45 வயது மதிப்புடைய பழங்குடி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை நெருப்பு வைத்து கொளுத்தினர். இதனால், அப்பகுதி கலவர பூமியானது. எனவே, போலீசார் குவிக்கப்பட்டனர்.
கைது
இதனிடையே, பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை
இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த ஆக.,31ம் தேதி சாலையோரம் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்ட போது, ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. ஆனால், கடந்த செப்.,1ம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது.
அதிர்ச்சி
அதேவேளையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மீண்டும் சுயநினைவுக்கு வந்தவுடன், அவர் கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் கூறியதாவது:- நான் எனது தாயின் சொந்த ஊரான ஜெய்னூருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று விட்டு, ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், கட்டையை வைத்து என்னை தாக்கினார், எனக் கூறினார்.
பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம்மை எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம், போராட்டம் ஆகியவை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.