தேர்தல் முடிவு வெளியான பின் ஆந்திராவில் பயங்கர வன்முறை
தேர்தல் முடிவு வெளியான பின் ஆந்திராவில் பயங்கர வன்முறை
ADDED : ஜூன் 12, 2024 01:08 AM
அமராவதி, ஆந்திராவில் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஒய்.எஸ்.ஆர்.காங்., தொண்டர்கள் மீது, தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் 164 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.
ஆளுங்கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் படு தோல்வியை சந்தித்தது. இதற்கிடையே, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள சந்திரபாபு நாயுடு, இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசாருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் கர்னுால் மாவட்டத்தில் தெலுங்கு தேசத்தை சேர்ந்த கவுரிநாத் சவுத்ரி என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது இறப்பிற்கு, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசாரின் வன்முறை சம்பவங்களே காரணம் என சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலடியாக, ஆந்திராவின் மங்களகிரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் பிரமுகரை, தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து துன்புறுத்தியதுடன், அவரை மண்டியிட வைத்து, நாரா லோகேஷின் புகைப்படம் முன், மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இது வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மாநிலம் முழுதும் அதிகரித்து வருவதால், மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.