காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: தேடுதல் வேட்டை தீவிரம்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: தேடுதல் வேட்டை தீவிரம்
ADDED : ஜூலை 22, 2024 11:10 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குண்டா கிராமத்தில் ராணுவ முகாம் மீது இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே, ஒரு மணி நேரத்திற்கு மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது.
இதையடுத்து பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். பாதுகாப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கி போராடினர். இதனால் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளது. தப்பி ஓடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.