ADDED : ஏப் 29, 2024 06:31 AM
ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கிராம பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் நகரில் உள்ள பனாரா என்ற கிராமத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி நேற்று காலை 7:45 மணி அளவில், பனாரா கிராமத்தில், ஜம்மு - காஷ்மீர் போலீசார், கிராம பாதுகாப்பு படை உள்ளிட்டோர், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வனப்பகுதிக்கு தப்பிச் சென்றனர்.
அவர்களை துரத்திய பாதுகாப்புப் படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கிராம பாதுகாப்பு படையைச் சேர்ந்த முகமது ஷெரீப் என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
