காது கூசும் கருத்தையும் கவனிச்சு கேக்கணும்: கட்கரி அறிவுரை யாருக்குன்னு பாருங்க!
காது கூசும் கருத்தையும் கவனிச்சு கேக்கணும்: கட்கரி அறிவுரை யாருக்குன்னு பாருங்க!
ADDED : செப் 21, 2024 07:32 AM

புனே: 'ஆட்சியாளர் தனக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை கூட சகித்துக்கொள்வதும், அதன் அடிப்படையில் சுய பரிசோதனை செய்வதும் தான் ஜனநாயகம்' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
புனே எம்.ஐ.டி., பல்கலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், நிதின் கட்கரி பேசியதாவது: தீண்டாமை, சமூக தாழ்வு மற்றும் மேன்மை பற்றிய கருத்துகள் நீடிக்கும் வரை தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி முழுமையடைந்ததாக கூற முடியாது. ஆட்சியாளர்கள், தங்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் மிக மோசமான கருத்துக்களை சகித்துக் கொள்வதும், அதன் அடிப்படையில் சுய பரிசோதனை செய்து கொள்வதும் தான் முக்கியம்.
அதுதான் ஜனநாயகம். இந்தியாவில் கருத்து வேறுபாடுகளால் பிரச்னை இல்லை. கருத்துக்களே இல்லை என்பதுதான் பிரச்னையாக உள்ளது. நாங்கள் வலதுசாரிகளும் இல்லை, இடதுசாரிகளும் இல்லை, சந்தர்ப்பவாதிகள். எழுத்தாளர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.
சமீபத்தில், 'அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது.ஆவணங்கள் வேகமாக நகர்கின்றன. என்னை ஒரு அரசியல் தலைவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்பினார். அந்த வாய்ப்பை ஏற்க நான் மறுத்துவிட்டேன்' என நிதின் கட்கரி கூறியது அரசியல் களத்தில் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.