ADDED : மார் 26, 2024 11:31 PM

தாவணகெரே : தாவணகெரே பா.ஜ.,வில் ஏற்பட்ட அதிருப்தியை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா சரிக்கட்டி உள்ளார்.
தாவணகெரே தொகுதி பா.ஜ., - எம்.பி., சித்தேஸ்வர். நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர். நடக்க இருக்கும் தேர்தலில், சித்தேஸ்வருக்கு சீட் கொடுக்க, தாவணகெரே பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் அமைச்சர்கள் ரவீந்திரநாத், ரேணுகாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர்.
இதனால் சித்தேஸ்வருக்கு பதிலாக, அவரது மனைவி காயத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி துாக்கினர். காயத்ரிக்கு பதிலாக வேறு வேட்பாளரை, அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். கூட்டத்திற்கு மேல் கூட்டம் நடத்தி, கர்நாடகா பா.ஜ., தலைவர்களை திணறடித்தனர்.
வேறு வழியின்றி அதிருப்தியாளர்களை சரிசெய்ய, முன்னாள் முதல்வர் எடியூரப்பா களத்தில் இறங்கினார். தாவணகெரேவுக்கு நேற்று சென்ற அவர், அதிருப்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
'தாவணகெரே நமது கோட்டை. உங்கள் பிடிவாதத்தால் தொகுதியை இழந்து விட வேண்டாம். கட்சி மேலிடம் தான் காயத்ரியை வேட்பாளராக அறிவித்து உள்ளது. அவர் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செல்லுங்கள். உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும், நான் தீர்த்து வைக்கிறேன்' என்று, எடியூரப்பா உறுதி அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அதிருப்தியாளர்கள், காயத்ரியை ஆதரிப்பதாக கூறினர். காயத்ரியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, ரவீந்திரநாத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

