ADDED : மார் 06, 2025 12:50 AM

சிக்கபல்லாபூர்:வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க பயிற்சி அளித்த, போக்குவரத்து தலைமை ஏட்டு கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூரில் தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தன.
பிப்., 20ல், கவுரிபிதனுாரில் சீனிவாஸ் என்பவரின் வீட்டிற்கு புகுந்து, தங்க நகைகள், வைரங்களை மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது.
விசாரணை நடத்திய கவுரிபிதனுார் போலீசார், ரவுடி தன்வீர், சபீர், பைரோஸ், பஷீர் அகமது, இர்பான் பாஷா, பாபாஜான், அமின் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க, ஹென்னுார் போக்குவரத்து போலீஸ் தலைமை ஏட்டு இலியாஸ் பயிற்சி அளித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, இலியாசையும் கைது செய்தனர்.
கொள்ளையர்களுக்கு போலீசே பயிற்சி அளித்தது, போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.