திலகர் துவக்கி வைத்த உற்சவம் 120 ஆண்டுகள் பாரம்பரியம்
திலகர் துவக்கி வைத்த உற்சவம் 120 ஆண்டுகள் பாரம்பரியம்
ADDED : செப் 09, 2024 04:42 AM

சுதந்திரப் போராட்டத்துக்கு, மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், பாலகங்காதர திலகர் துவக்கிய விநாயகர் உற்சவம், 120 ஆண்டுகளை நிறைவு செய்தது.
அது, சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்திருந்த காலமாகும். சுதந்திரப் போராட்டத்துக்கு, மக்களை திரட்ட லோக்மான்ய பாலகங்காதர திலகர் முயற்சித்தார். அந்த காலத்தில் அவரவர் வீடுகளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நடைமுறை இல்லை.
அனைவரும் பொது இடங்களில், ஒன்று சேர்ந்து பண்டிகை கொண்டாடும்படி திலகர் அழைப்பு விடுத்தார். இதன்படி 1893ல் மஹாராஷ்டிராவின், புனேவில் முதன் முறையாக பொது விநாயகர் உற்சவம் ஆரம்பமானது.
அதன்பின் மும்பையில் நடந்தது. இதன் தாக்கம் கர்நாடகாவின் பெலகாவிக்கும் பரவியது. 1905ல் பாலகங்காதர திலகரே, பெலகாவிக்கு வருகை தந்து, இங்குள்ள ஜென்டா சவுக்கின் சாந்தாராம் விஷ்ணு பாடனேகரின் மளிகைக்கடையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தார்.
இந்த வேளையில் சுதந்திர போராளிகள் கோவிந்தராவ் மாளகி, கங்காதர ராம் தேஷ்பாண்டே உட்பட பலர் திலகருடன் இருந்தனர்.
அன்று துவங்கிய பொது விநாயகர் உற்சவம், இன்று வரை பாரம்பரியமாக நடந்து வருகிறது. இதற்காக பொது விநாயகர் உற்சவ கமிட்டி அமைக்கப்பட்டது. இம்முறையும் கோலாகலமாக விநாயகர் உற்சவம் நடக்கிறது. 12 அடி உயரத்தில் அழகான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
விநாயகர் உற்சவ கமிட்டி பொருளாளர் அஜித் சித்தன்னவரா கூறியதாவது:
கர்நாடகாவிலேயே எங்களுடையது, முதல் விநாயகர் உற்சவ கமிட்டியாகும். கடந்த 19 ஆண்டுகளாக, கலை, கலாசாரம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிறோம். நடப்பாண்டும் இளைஞர்களுக்காக, சர்வதேச அளவில் உடல் திறன் போட்டி நடத்துகிறோம்.
உற்சவம் நடக்கும் 11 நாட்களும், நாங்கள் மதுபானம், அசைவத்தை தொடமாட்டோம். பக்தி, சிரத்தையுடன் விநாயகரை பூஜிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்துவதில்லை. விநாயகர் உற்சவத்தில் பாரம்பரிய கிராமிய கலைக்குழுக்களை பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.
- நமது நிருபர் -