ADDED : செப் 01, 2024 11:58 PM

சாம்ராஜ்நகர்: உணவு தேடி வந்து ரயில்வே தண்டவாள தடுப்பில் சிக்கிய 45 வயதுள்ள ஆண் யானையை வனத்துறையினர் மீட்டனர்.
வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில், விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்த கூடாது என்று, ரயில்வே தண்டவாளங்கள் தடுப்புகளாக வைக்கப்பட்டு உள்ளன.
உணவு தேடி வரும் சில யானைகள், வெற்றி கரமாக தாண்டி விடுகின்றன. சில யானைகள் தாண்ட முடியாமல், தண்டவாள தடுப்பில் சிக்கி உயிரிழக்கின்றன.
இந்நிலையில், சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட்டின் பண்டிப்பூர் புலிகள் காப்பகம், மத்துார் வனவிலங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவினஹள்ளியில், உணவு தேடி இரு யானைகள் வந்துள்ளன. இதில் ஒரு யானை, ரயில்வே தண்டவாள தடுப்பை தாண்டி சென்றுவிட்டது. மற்றொரு யானை தாண்ட முயற்சித்து சிக்கிக் கொண்டது.
இதை பார்த்த அப்பகுதியினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், தண்டவாள தடுப்பை அகற்றி, யானை வெளியேற உதவினர். யானையும், மற்றொரு யானையுடன் வனப்பகுதிக்கு சென்றுவிட்டது.
வனத்துறையினரின் செயலை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
2_DMR_0012
தண்டவாள தடுப்பில் சிக்கிய யானையை மீட்கும் வனத்துறை ஊழியர்கள். இடம்: சாம்ராஜ்நகர்.