நான்காம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 2026ல் பயணியர் சேவை துவக்க இலக்கு
நான்காம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 2026ல் பயணியர் சேவை துவக்க இலக்கு
ADDED : ஆக 17, 2024 07:49 PM
புதுடில்லி:டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 4ம் கட்ட திட்டத்தில் அனைத்து நிலையங்களிலும் நடைமேடையில் பி.எஸ்.டி., எனப்படும் பிளாட்பார்ம் ஸ்கிரீன் கதவுகள் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை செயல் இயக்குனர் அனுஜ் தயாள் கூறியதாவது:
நான்காம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 40 கி.மீ., தூரத்துக்கு 27 நிலையங்கள் பூமிக்கு கீழே அமைந்துள்ளன. இந்த நிலையைங்களில் 2.15 மீட்டர் முழு உயர பிளாட்பார்ம் ஸ்கிரீன் கதவுகள் பொருத்தப்படும். மெட்ரோ ரயிலின் கதவு திறக்கும் போது ஸ்கிரீன் கதவுகளும் திறக்கும்.
தற்போது செயல்பாட்டில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் தடத்தில் பிளாட்பார்ம் ஸ்கிரீன் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. பிங்க், மெஜந்தா மற்றும் மஞ்சள் தடத்தில் ஆறு நிலையங்களில் அரை உயர ஸ்கிரீன் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் நான்காம் கட்ட திட்டப் பணிகள் துவக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் மற்றும் மரங்களை வெட்ட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆகிய காரணங்களால், 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பணிகள் முடங்கின. வரும் 2026ம் ஆண்டுக்குள் 65 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில் பயணியர் சேவை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

