'108' ஊழியர்கள் போராட்டம் மாற்று ஏற்பாட்டுக்கு அரசு தயார்
'108' ஊழியர்கள் போராட்டம் மாற்று ஏற்பாட்டுக்கு அரசு தயார்
ADDED : மே 07, 2024 05:30 AM

பெங்களூரு : ''ஆரோக்கிய கவசம் '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போராட்டம் நடத்துவதாக அறிவித்ததால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மாற்று வசதி செய்யப்படும்,'' என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
மூன்று மாதங்களாக, ஊதியம் வழங்கவில்லை என, ஆரோக்கிய கவசம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இவர்களை போராட்டம் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிறிது பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஊதியத்தை குறைக்கவில்லை. இது தேர்தல் நேரமாகும்.
மாற்றம் எதுவும் செய்ய முடியாது. தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், ஊழியர்கள் போராட்டம் நடத்த கூடாது.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மனம் மாறவில்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்வோம். எங்களிடம் வேறு ஓட்டுனர்கள் உள்ளனர்.
அவர்களை ஆம்புலன்ஸ்களுக்கு நியமித்து, பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.