வீட்டு உணவு கேட்ட தர்ஷன் மனு மீதான விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வீட்டு உணவு கேட்ட தர்ஷன் மனு மீதான விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 21, 2024 07:15 AM
பெங்களூரு: சிறையில் வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்கும்படி, நடிகர் தர்ஷன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஏற்க முடியாது
சிறையில் கொடுக்கப்படும் உணவை சாப்பிட முடியாமல் தர்ஷன் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. சிறையில் அடைக்கப்படும் முன்பு தர்ஷனின் உடல் எடை 105 கிலோவாக இருந்தது. சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல் எடை 95 கிலோவாக குறைந்தது.
சிறையில் கொடுக்கப்படும் உணவு ஒத்துக் கொள்ளாததால், உணவே விஷமாக மாறுவதாகவும், இதனால் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்கும்படி, தர்ஷன் தரப்பு வக்கீல்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பானுபிரகாஷ் வாதாடுகையில், 'பரப்பன அக்ரஹாரா சிறையில் 5,000 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
'அவர்கள் அனைவரும் சிறையில் கொடுக்கப்படும் உணவை தான் சாப்பிடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. தர்ஷனுக்கு மட்டும் பிரச்னை ஏற்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார்.
கவலை இல்லை
தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல் பனிந்திரா வாதாடுகையில், 'சிறையில் உள்ள கைதிகள் சிறை உணவு சாப்பிடுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் எனது மனுதாரருக்கு சிறை உணவு ஒத்துக் கொள்ளவில்லை. சிறையில் இருக்கும் கைதிக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அனுமதி கொடுக்க, சட்டத்தில் இடம் உள்ளது' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வலு சேர்க்கும் வீடியோ
இதற்கிடையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான பிரதோஷ் என்பவர், ரேணுகாசாமியை, தர்ஷன் தாக்குவதை தனது மொபைல் போனில் மூன்று நிமிட வீடியோ எடுத்துள்ளார்.
ஆனால் அவர், அந்த வீடியோவை அழித்துள்ளார். அவரது மொபைல் போனை தடய ஆய்வியல் மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துஉள்ளனர்.
மொபைல் போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ மீட்டெடுக்கப்பட்டால், தர்ஷனுக்கு எதிரான சாட்சிக்கு 'வலு' சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது.