ADDED : மே 04, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்காட், மஹாராஷ்டிர மாநிலம் ராய்காட் லோக்சபா தொகுதிக்கான தேர்தல், வரும் 7ல் நடக்கிறது.
இதையொட்டி, உத்தவ் பால்தாக்கரே சிவசேனா கட்சியின் துணை தலைவர் சுஷ்மா அந்தரே ராய்காட்டில் நடக்க இருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருந்தார்.
இதற்காக அவர் மஹாத் பகுதியில் இருந்து வாடகை ஹெலிகாப்டரில் செல்ல இருந்தார். அவரை ஏற்றிச் செல்வதற்காக நேற்று காலை ஹெலிகாப்டர் மஹாத்துக்கு வந்தது.
அப்போது தரையிறங்க முயன்ற ஹெலிகாப்டர், பைலட் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பயங்கர சத்தத்துடன் புழுதியை கிளப்பியபடி கீழே விழுந்தது.
சுதாரித்த பைலட், கீழே குதித்து காயத்துடன் உயிர் தப்பினார். எனினும் அந்த ஹெலிகாப்டர் நொறுங்கி சேதமடைந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.