விமானத்தில் துாக்கி செல்லப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
விமானத்தில் துாக்கி செல்லப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
ADDED : ஆக 31, 2024 11:41 PM

புதுடில்லி: உத்தரகண்டின் கேதார்நாத்தில் சில மாதங்களுக்கு முன் பழுதாகி அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் நிறுவன ஹெலிகாப்டரை, விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் நேற்று துாக்கி சென்றபோது, மந்தாகினி ஆற்றின் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த, 'கிரிஸ்டல் ஏவியேஷன்' என்ற தனியார் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், கேதார்நாத் கோவிலுக்கு கடந்த மே 24ல் பக்தர்களை ஏற்றிச் சென்றபோது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, கேதார்நாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது முதல் அந்த ஹெலிகாப்டர் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு இருந்தது.
இதை அங்கிருந்து உத்தரகண்டின் கவுசார் விமான தளத்திற்கு எடுத்து சென்று பழுது பார்க்க, தனியார் நிறுவனம் திட்டமிட்டது.
இதற்காக, நம் விமானப்படையின் உதவியை நாடியது. நம் விமானப் படைக்கு சொந்தமான, மிக் - 17 ரக ஹெலிகாப்டர், அந்த தனியார் ஹெலிகாப்டரை நேற்று காலை 7:00 மணிக்கு துாக்கி சென்றது. உறுதியான கம்பியுடன் இணைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டரை துாக்கிக் கொண்டு மிக் - 17 ரக விமானப்படை ஹெலிகாப்டர் புறப்பட்டது.
சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியதால், விமானப்படை ஹெலிகாப்டர் தள்ளாட துவங்கியது. இதையடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக பார்த்து, தனியார் ஹெலிகாப்டரை, ராணுவ பைலட் கழட்டிவிட்டார்.
அது, லின்சோலி என்ற இடத்தில் ஓடும் மந்தாகினி ஆற்றுக்கு அருகே விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் நிலப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.