ஊழலின் நாயகன் பிரதமர் மோடி காங்., - எம்.பி., ராகுல் விளாசல்
ஊழலின் நாயகன் பிரதமர் மோடி காங்., - எம்.பி., ராகுல் விளாசல்
ADDED : ஏப் 18, 2024 01:04 AM

காஜியாபாத்,“உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டமான தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் நாயகன்,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டிஉள்ளார்.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து நேற்று பேசினார்.
மறைத்தது ஏன்?
பின் இருவரும் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் கூறியதாவது:
இந்த தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., இணைந்து, அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கின்றன.
மறுபுறம், இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள், அவற்றை பாதுகாக்க முயல்கின்றன. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கையில் அவற்றில் இருந்து மக்களை பா.ஜ., திசை திருப்புகிறது.
வெளிப்படைத் தன்மைக்காகவும், துாய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார்.
இது உண்மையாக இருந்தால், அந்த திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது.
வெளிப்படைத் தன்மையை கொண்டு வர விரும்பினால், பா.ஜ.,வுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தவர்கள் பெயர் ஏன் மறைக்கப்பட வேண்டும். அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?
150 இடங்கள்
தேர்தல் பத்திர திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம்.
நாட்டில் உள்ள அனைத்து தொழிலதிபர்களுக்கும் அது தெரியும். இதுகுறித்து பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
ஏனென்றால், பிரதமர் ஊழலின் நாயகன் என்று நாட்டிற்கே தெரியும். இந்த தேர்தலில், பா.ஜ., 180 இடங்களை கைப்பற்றும் என சில நாட்கள் வரை நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது, அக்கட்சிக்கு 150 இடங்களே கிடைக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

