ADDED : ஏப் 18, 2024 12:45 AM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் ஷைஜு, 47; மலையின் கீழ் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தார். 2019-ல் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் டாக்டர் ஒருவர், புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷைஜுவை தொடர்பு கொண்டார்.
அப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. டாக்டரை அவரது கணவர் விவாகரத்து செய்து விட்டார். இதனால், தன்னை திருமணம் செய்ய, இன்ஸ்பெக்டரிடம் பெண் டாக்டர் வற்புறுத்தி வந்தார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அவருடன் உள்ள தொடர்பை பெண் டாக்டர் நிறுத்தினார்.
இன்ஸ்பெக்டர் அவரை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் டாக்டர், கேரள டி.ஜி.பி.,யிடம் புகார் செய்தார். ஷைஜு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை எர்ணாகுளம் அம்பேத்கர் ஸ்டேடியம் அருகே உள்ள ஒரு மரத்தில் இன்ஸ்பெக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

