கருக்கலைப்பு தகவலை வெளியிடக்கூடாது குடும்ப நல அலுவலரை துன்புறுத்திய அதிகாரி
கருக்கலைப்பு தகவலை வெளியிடக்கூடாது குடும்ப நல அலுவலரை துன்புறுத்திய அதிகாரி
ADDED : மார் 22, 2024 07:03 AM
பெங்களூரு: 'சட்டவிரோத கருக் கலைப்பு குறித்த தகவலை, ஊடகங்கள் முன்பு வெளியிட கூடாது' என்று, குடும்பநல அலுவலரை, மாவட்ட சுகாதார அதிகாரி துன்புறுத்தி உள்ளார்.
பெங்களூரு, பையப்பனஹள்ளி போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், குழந்தை விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஒரு கும்பல், சட்டவிரோத கருக் கலைப்பில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து கருக் கலைப்பில் ஈடுபட்ட டாக்டர் உட்பட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் மாநிலத்தின் சில இடங்களில் நடக்கும், சட்டவிரோத கருக் கலைப்பு பற்றி தகவல் வெளியானது.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி, நெலமங்களாவிலும் தனியார் மருத்துவமனையில், கருக் கலைப்பு நடந்தது தெரிந்தது.
பெங்களூரு ரூரல் மாவட்ட சுகாதார துறை குடும்ப நல அலுவலர் மஞ்சுநாத், இந்த வழக்கை வெளிச்சம் போட்டு காட்டினார். ஊடகங்களுக்கும் தகவல் கொடுத்தார்.
இந்நிலையில், பெங்களூரு ரூரல் மாவட்ட சுகாதார அதிகாரி சுனில்குமார், மஞ்சுநாத்திடம், கருக் கலைப்பு குறித்த தகவலை, ஊடகங்கள் முன்பு வெளியிட கூடாது என்று கூறி உள்ளார்.
இதற்கு மஞ்சுநாத் மறுத்ததால், அவருக்கு அடிக்கடி நோட்டீஸ் கொடுத்து, துன்புறுத்தி வந்துஉள்ளார்.
இதுதவிர மோசமான பொது கழிப்பறைகள் பற்றியும், வெளியில் எதுவும் சொல்ல கூடாது என்றும் மிரட்டி இருக்கிறார்.
இதனால் மனம் உடைந்த மஞ்சுநாத், சுனில்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடகா சுகாதார ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

