'எமர்ஜென்சி'யில் கைதை தவிர்க்க மாறுவேடத்தில் சுற்றிய பிரதமர்
'எமர்ஜென்சி'யில் கைதை தவிர்க்க மாறுவேடத்தில் சுற்றிய பிரதமர்
UPDATED : ஜூன் 25, 2024 08:56 PM
ADDED : ஜூன் 25, 2024 08:52 PM

எமர்ஜென்சி காலத்தின்போது, போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பிக்க, சர்தார்ஜி, ஸ்வாமிஜி என பல வேடங்களைப் போட்டு, பிரதமர் நரேந்திர மோடி தப்பியுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேச்சு சுதந்திரம்
கடந்த, 1975ல் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா, நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலையை அறிவித்தார்.இதையடுத்து, நாடு முழுதும் பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டன. ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களாக அந்த காலம் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து, 21 மாதங்களுக்கு அவசர நிலை நடைமுறையில் இருந்தது.
எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக பேசுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பிரதமர் மோடி இருந்தார்.
எமர்ஜென்சிக்கு எதிராக மக்களைத் திரட்டும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டிருந்தது.
அதனால், அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், போலீசில் சிக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.அந்த நேரத்தில், குஜராத்தின் பல பகுதிகளுக்கு பிரதமர் மோடி சுற்றி வந்து, எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வந்தார்.
பிரசாரம்
போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, சர்தார்ஜி, ஹிந்து சாமியார் என, பல வேடங்களை அவர் போட்டுள்ளார்.போலீசாரிடம் சிக்காமல், இயக்கத்துக்கான பிரசாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.சிறையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளையும் மாறுவேடத்தில் சென்று அவர் சந்தித்துள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.