முதல் 'ரேங்க்' மாணவிக்கு மிரட்டல் தற்கொலைக்கான காரணம் அம்பலம்
முதல் 'ரேங்க்' மாணவிக்கு மிரட்டல் தற்கொலைக்கான காரணம் அம்பலம்
ADDED : ஜூலை 12, 2024 06:56 AM
ஹாவேரி: நன்றாக படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., மாணவி தற்கொலைக்கு என்ன காரணம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹாவேரி, ஹிரேகெரூரின் ஆலதகட்டி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா, 16. இவர் துாதிஹள்ளியின், மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் சூட்டிகையான மாணவி, முதல் ரேங்க் எடுத்திருந்தார்.
ஜூலை 2ல், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த இவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துன்புறுத்தல்
நன்றாக படிக்கும் இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியாமல் குடும்பத்தினர் குழப்பம் அடைந்தனர். மாணவியின் தற்கொலையை பெற்றோர் மூடி மறைத்தனர். போலீசாரிடம் தெரிவிக்காமல், இறுதி சடங்குகளும் நடத்தினர்.
அதன்பின், மாணவி எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. இதில் தற்கொலைக்கான காரணத்தை விவரித்திருந்தார்.
இவர் படித்த உறைவிட பள்ளியில், ஆரிபுல்லா என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மகள் ஜோயா, அதே பள்ளியில் அர்ச்சனாவுடன் படிக்கிறார். ஜோயாவை விட அர்ச்சனா நன்றாக படித்தார். முதல் ரேங்க் எடுத்தார்.
இதை ஜோயா, அவரது தாய் ஆகியோரால் சகிக்க முடியவில்லை. அவரது தாய், அவ்வப்போது பள்ளிக்கு வந்து, அர்ச்சனாவை திட்டினார். 'என் மகளை விட நீ ஏன் நன்றாக படிக்கிறாய்' என கேட்டு, மனரீதியில் துன்புறுத்தினார்.
தாய், மகளின் கொடுமையை தாங்க முடியாமல், மனம் நொந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார்.
இவரது பெற்றோர், கடிதத்தை கிராமத்தினரிடம் காண்பித்தனர். இதையறிந்த பள்ளி நிர்வாகம், அர்ச்சனாவின் பெற்றோர், ஆசிரியர் ஆரிபுல்லாவின் குடும்பத்தினருடன் சமாதான பேச்சு நடத்தியது. ஆரிபுல்லா, தன் மனைவி, மகளை காப்பாற்றும் நோக்கில், அர்ச்சனா தற்கொலையை மூடி மறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஒப்புக்கொண்ட அர்ச்சனாவின் குடும்பத்தினர், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டனர். ஆனால், ஆரிபுல்லா, 1 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
விசாரணை
இவரிடம் கிராமத்தின் சிலரும் பணம் எதிர்பார்த்தனர். பணம் கிடைக்காததால், விஷயத்தை பரப்பினர். அதன்பின் சில இளைஞர்கள், அர்ச்சனாவின் தற்கொலை கடிதத்தை மொபைல் போனில் போட்டோ எடுத்து, ஹாவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும் விசாரணையை துவக்கினர். நேற்று காலை, அர்ச்சனாவின் ஆலதகட்டி கிராமத்துக்கும், அவர் படித்த உறைவிட பள்ளிக்கும் சென்ற போலீசார், விசாரித்து தகவல் பெற்றனர்.