மத்திய, கர்நாடக அரசில் தலைமை மாறலாம்; கோடி மடாதிபதி ஆரூடத்தால் பரபரப்பு
மத்திய, கர்நாடக அரசில் தலைமை மாறலாம்; கோடி மடாதிபதி ஆரூடத்தால் பரபரப்பு
ADDED : செப் 10, 2024 02:43 AM

ஹாசன் : ''மத்திய, மாநில அரசுகளின் தலைமை மாறும் வாய்ப்புள்ளது,'' என, கர்நாடகாவின் கோடி மடத்தின் மடாதிபதி ஆரூடம் கூறியுள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. ஹாசன், அரசிகெரேவின் ஹாரனஹள்ளி கிராமத்தில் கோடி மடம் உள்ளது.
கணிப்புகள்
இதன் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள், அரசியல், இயற்கை சீற்றம், நாட்டு நடப்பு என, அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆரூடம் கணிப்பார். பல நேரங்களில் இவர் கூறியது பலித்துள்ளது.
கடந்த 2018 சட்டசபை தேர்தலின்போது, 'எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இரண்டு கட்சிகள் சேர்ந்து அரசு அமைக்கும்' என, கூறியிருந்தார். அதன்படியே தொங்கு சட்டசபை அமைந்து, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு அமைந்தது.
அதன்பின், 'அரசில் குழப்பங்கள் ஏற்பட்டு, ஆட்சி மாறலாம்' என்றும், கூறினார். அதேபோன்று கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, அரசு கவிழ்ந்தது. 2019ல் பா.ஜ., ஆட்சி அமைத்தது.
இயற்கை சீற்றங்கள், உயிரிழப்பு, தீ விபத்துகள் ஏற்படும் என்றும், அவர் கணித்தார். 2023 அக்டோபரில் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் தீப்பிடித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். 2023 சட்டசபை தேர்தலின்போது, 'ஒரு கட்சி அரசு அமையும்' என, தெரிவித்தார். அதுபோன்று காங்., அரசு அமைந்தது.
இந்நிலையில், ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாட்டில் இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக ஆகாயத்தில் இருந்தும், நமக்கு பெரிய ஆபத்து வரலாம்.
வாய்ப்பு
வெள்ள பெருக்கால் உலகம் முழுதும், பல இடங்கள் மூழ்கும் என, ஏற்கனவே கூறியிருந்தேன். அதன்படி நடந்துள்ளது. வரும் நாட்களில் மழை அதிகரிக்கலாம்.
சூழ்ச்சி செய்து அபிமன்யுவின் வில்லை, கர்ணன் மூலமாக உடைக்க வைத்தனர். மஹாபாரதத்தில் கிருஷ்ணன் இருந்ததால், பீமன் வெற்றி பெற்றான். இப்போது கிருஷ்ணர் இல்லாமலேயே, துரியோதனன் வெற்றி பெறுவான் என, நான் கூறினேன்.
மத்திய, மாநில அரசுகளிலும் இப்படித்தான் நடக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதுவும் ஆகாது. ஆனால், அவற்றின் தலைமை மாறும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'மூடா' முறைகேடு புகாரில் சிக்கியுள்ள முதல்வர் சித்தராமையா பதவி எந்நேரமும் பறிபோகலாம் என தகவல்கள் உலா வருகின்றன.
அதேபோல, மத்திய அரசிலும் தலைமை மாற்றம் இருக்கும் என மடாதிபதி கூறியிருப்பதால், பா.ஜ., - காங்., என, இரு கட்சியினருமே கலக்கத்தில் உள்ளனர்.

