மொழிகளுக்கு இடையே பகைமை இல்லை; மராத்தி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
மொழிகளுக்கு இடையே பகைமை இல்லை; மராத்தி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : பிப் 22, 2025 06:32 AM

புதுடில்லி : ''இந்திய மொழிகளுக்கு இடையே பகைமை எதுவும் கிடையாது. அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நம் பொறுப்பு,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .
டில்லியில் நேற்று, 98வது அகில பாரதிய மராத்தி சம்மேளன மாநாடு நடைபெற்றது. இதில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கும்போது,நம்முடைய மொழியியல் பாரம்பரியம், வலுவான எதிர்ப்பை தெரிவிக்கிறது. மொழி பிளவுகளை ஏற்படுத்தும் தவறான எண்ணங்களிலிருந்து விலகி, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது தான் நம் சமூக பொறுப்பு.
மொழிகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று செல்வாக்கு செலுத்தி, செழுமைப்படுத்தியிருக்கின்றன. இந்தியாவின் அனைத்து மொழிகளும் முக்கியமானவை. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவிக்கிறோம். ஆங்கில புலமை இல்லாததால், திறமையை கண்டு கொள்ளாமல் இருக்கும் மனநிலையை மாற்றியுள்ளோம்.
மொழி இலக்கியம் தான் சமூகத்தின் கண்ணாடி. சமூகத்தின் திசையையும் இலக்கியம் தான் வழி நடத்துகிறது. எனவே மொழி இலக்கிய மாநாடுகளும் இலக்கியத்துடன் தொடர்புடைய நிறுவனங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறு மோடி கூறினார்.
முன்னதாக, குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தபோது, 'இண்டி' கூட்டணியின் முக்கிய தலைவரான சரத் பவாரையும், பிரதமர் மோடி அழைத்து குத்து விளக்கு ஏற்றச் செய்தார். மேலும், விழாவில் சரத்பவார் பேசிய பின், இருக்கையில் அவர் அமருவதற்கும் மோடி உதவியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

