ADDED : ஜூன் 30, 2024 10:34 PM

மைசூரு : ''காங்கிரஸ் மேலிடம் மனம் வைத்தால், துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் ஆவார்,'' என ம.ஜ.த., ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இதற்கு முன் காங்கிரஸ் பலவீனமாக இருந்தது. அப்போது சித்தராமையா ஸ்ட்ராங் ஆக இருந்தார். தற்போது கட்சி வலுவாக உள்ளது.
முதல்வர் பதவி விஷயத்தில், கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்பதாக, சித்தராமையா கூறியுள்ளார். கட்சி மேலிடம் மனம் வைத்தால், சிவகுமார் முதல்வராவார்.
ஒக்கலிகர் மடத்தின் சுவாமிகள், சிவகுமார் மீதான அன்பால், இவர் முதல்வராக வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கிறார். முதல்வர் பதவி பகிர்ந்தளிக்கப்படுவதாக, இதற்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், சிவகுமார் முதல்வராக வேண்டும் என்கின்றனர். இதில் தவறேதும் இல்லை.
அதே நேரத்தில் பதவியை, எப்படி தக்க வைத்து கொள்வது என, சித்தராமையாவுக்கு தெரியும். இவர் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர். 15 முறை நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்தவர். அவர் வாழ்க்கையில், பல அனுபவங்களை பெற்றவர். எனவே திடீரென பதவியை விட்டு கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.