ADDED : செப் 15, 2024 10:58 PM

பெங்களூரு: பலத்த பாதுகாப்பையும் மீறி, முதல்வர் சித்தராமையாவுக்கு சால்வை அணிவிக்க, மேடை ஏறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச ஜனநாயக தினத்தை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில், மனித சங்கிலி துவக்க விழா நேற்று நடந்தது. இதற்காக, பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
முதல்வர் சித்தராமையா, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அமைச்சர்கள் தினேஷ் குண்டுராவ், ஜார்ஜ், பிரியங்க் கார்கே, எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உட்பட முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.
மேடைக்கு முன் பொது மக்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா வரவேற்புரை ஆற்றி கொண்டிருந்தார்.
அப்போது, கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞர், திடீரென மேடை மீது ஏற முயன்றார். முதல்வருக்கு சால்வை அணிவிக்க முயன்றார்.
இதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை பிடித்து, இழுத்து சென்றனர். அப்போது, அந்த சால்வையை மேடை முன்பு வீசி விட்டார்.
என்ன நடக்கிறது என்று அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. ஆனாலும், அமைச்சர் மஹாதேவப்பா தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார்.
தடுப்புகள் அமைத்தும், அதையும் தாண்டி ஒருவர், முதல்வருக்கு சால்வை அணிவிக்க மேடை ஏறியது, பாதுகாப்பு குளறுபடி என்று சொல்லப்படுகிறது. அவர் ராம்நகர் மாவட்டம், கனகபுராவை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரிடம் விதான் சவுதா போலீசார் விசாரிக்கின்றனர்.

