ADDED : ஜூலை 12, 2026 11:00 AM
––––––––––––––––
‘உங்கள் யோசனை
வெற்றியடையும்
என நம்புங்கள்!’
––––––––––––––––
கோவை, காந்திபுரம் வ.உ.சி., மைதானம் அருகில், ‘மிஸ் முறுகல் தோசைக்கடை’ நடத்தி வரும் தோழியரான லீலா மற்றும் பிரியதர்ஷினி:
* லீலா: நேர்முகத் தேர்வு ஒன்றில் தான் நாங்கள் சந்தித்து கொண்டோம். அது முடிந்து கிளம்பும்போது மொபைல் போன் எண் வாங்கி, நண்பர்களானோம். அதன்பின் ஒன்றாகவே பல நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றோம். மாதம், 13,500 ரூபாய் சம்பளத்தில் இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்தது; அது போதுமானதாக இல்லை.
அதனால், இருவரும் சேர்ந்து தொழில் செய்ய முடிவெடுத்தோம். முதலில், துரித உணவுகள் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று யோசித்தோம். ஆனால், நம் பாரம்பரிய உணவுகளை தான் மக்கள் தினமும் சாப்பிட விரும்புவர் என்று நினைத்து, வீட்டு சுவையில் தோசை கடை துவங்கலாம் என்று முடிவெடுத்தோம்.
ஆனால், ‘ரெண்டு பொண்ணுங்க தனியாக பிசினஸ் செய்து ஜெயிக்க முடியாது’ என்று, எங்கள் இரு குடும்பங்களிலும் எதிர்ப்பு இருந்தது. ‘ஆறு மாதம் மட்டும் டைம் கொடுங்கள்’ என்று அவகாசம் கேட்டு, எங்கள் நகைகளை அடகு வைத்தும், வங்கியில் கடன் வாங்கியும், ‘மிஸ் முறுகல் தோசை கடை’யை துவங்கினோம்.
எங்கள் கடையில் சைவ, அசைவ வகையில், 20 தோசை வகைகள் கொடுக்கிறோம். மாலை 7:00 முதல் இரவு 11:00 மணி வரை வியாபாரம் நடைபெறும். தோசைக்கு தேவையான சட்னி, சாம்பாரை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து விடுவோம்.
ஆரம்பத்தில், 20 ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்தோம். வாடிக்கையாளர் ஒருவர், ‘இந்த விலைக்கு கொடுத்தால் உங்களுக்கு கட்டுப்படியாகாது’ என்று அறிவுரை கூறியதால், 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆரம்பித்தோம். இப்போது, காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால், 50 ரூபாய்க்கு தருகிறோம். காஸ் விலை குறைந்தால், 30 ரூபாய்க்கே மீண்டும் விற்பனை செய்வோம்.
* பிரியதர்ஷினி: சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எங்கள் கடைக்கு வருகின்றனர். கடை துவங்கிய சில மாதங்களிலேயே, 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்தது. வாங்கிய கடனை வேகமாக அடைக்க வேண்டும் என்பது தான் முதல் நோக்கம்.
கடைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அடுத்தடுத்து கூடுதல் இடங்களில் தோசை கடை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம். தொழில் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறீர்களா...? உங்கள் யோசனை வெற்றியடையும் என்று நீங்கள் முதலில் முழுதாக நம்புங்கள்; அந்த இலக்கை நோக்கி மனம் தளராமல் சென்று கொண்டே இருந்தால், வெற்றி நிச்சயம்!
***
