கார் பந்தயம் நடத்துவதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களை இழுக்க முடியும் திருமாவளவன் எம்.பி.,
கார் பந்தயம் நடத்துவதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களை இழுக்க முடியும் திருமாவளவன் எம்.பி.,
ADDED : ஆக 31, 2024 01:58 AM
புதுச்சேரி:கார் பந்தயம் நடத்துவதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களை இழுக்க முடியும் என வி.சி.கட்சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., தெரிவித்தார்.
புதுச்சேரி கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அவதுாறு வழக்கு விசாரணைக்காக வி.சி.க., தலைவர் திருமாளவன் எம்.பி., நேற்று நேரில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி ரமேஷ் ஒத்தி வைத்தார்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திருமாவளவன் கூறியதாவது:
புதுச்சேரியில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான், தலித் அல்லாத பிற சமுகத்தினரிடம் பகை துாண்டும் வகையில் பாகுப்படுத்தி பேசியதாக என் மீது பொய் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தலைமறைவானவர் என்ற அறிவிப்புடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் நீதிபதி முன் நேரில் ஆஜராகி வழக்கை விரைந்து நடத்திட கோரிக்கை விடுத்துள்ளேன். பொய் வழக்கில் இருந்து என்னை விடுவிக்க விண்ணப்பம் அளித்துள்ளேன்.
வி.சி., கட்சி அங்கம் வகிக்கும் தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என ஏங்கும் சிலர் வதந்தி பரப்புகின்றனர்.
எங்கள் உரிமை தொடர்பாக நாங்கள் எழுப்பும் குரல் வேறு. கூட்டணி தொடர்பாக நாங்கள் கொண்டுள்ள நிலைப்பாடு வேறு. எனவே, இந்த வதந்திகள் தி.மு.க., கூட்டணி ஒற்றுமையை எந்த வகையிலும் பாதிக்காது. சென்னையில் விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கார் பந்தயமும் ஒன்று. இதுபோன்ற போட்டிகள் நடத்துவதன் மூலம் தலைநகர் சென்னையில் சுற்றுலா பயணிகளையும், தொழில் முதலீட்டாளர்களையும் கவர்ந்திழுக்க ஏதுவாக இருக்கும். பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற பெரு நகரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்துவதன் மூலமே தொழில் முதலீடுகள் பெருகுகின்றன.
எனவே, நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளும் முயற்சி என்பதால் தான் கார் பந்தயத்தை நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி மாநில அந்தஸ்த்து கிடைக்க இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியதை வரவேற்கிறோம். அதனை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.