ஓய்வுக்காலத்தை பயனுள்ளதாக ஆக்கியுள்ளது இந்த பண்ணை!
ஓய்வுக்காலத்தை பயனுள்ளதாக ஆக்கியுள்ளது இந்த பண்ணை!
ADDED : ஆக 25, 2024 12:39 AM

இயற்கை விவசாயத்துக்கான இடுபொருட்களை, 'பயோ டைஜஸ்டர்' என்ற தொட்டி வாயிலாக தயாரித்து வரும், கிருஷ்ணகிரி மாவட்டம், மட்டமத்திகெரே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபதி:
ஏழடுக்கு முறையில் பல பயிர்கள் சாகுபடி செய்கிறோம். ஒவ்வொரு அடுக்குக்கும் இடைவெளி விட்டுருக்கோம். மழைநீரை சேகரிக்கிறதுக்காகவும், பயிர்களின் வேர்களுக்கு காற்றோட்டம் ஏற்படுத்துறதுக்காகவும் அடுக்குகளுக்கு இடையில் 1 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்ட நீளமான குழிகள் எடுத்து உள்ளோம்.
பழ மரங்களுக்கு இடையில் மஞ்சள், காய்கறிகள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்கிறோம். சொட்டுநீர் பாசனம் தான் அமைத்து உள்ளோம். இயற்கை விவசாயத்துக்கு தேவையான நல்ல வீரியமான பல பயன் கொண்ட கரைசல்களை தனித்தனியாக கொடுப்பது தான் வழக்கம்.
ஆனால், அதற்கான வேலைகளை மிச்சப்படுத்தும் விதமாக பலவித சத்துக்கள் கொண்ட கரைசலை, எளிமையாக தயார் செய்றதுக்காகவே, 'பயோ டைஜஸ்டர்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம்.
இதில் தயார் செய்யப்படும் கரைசலை தான் எல்லா பயிர்களுக்கும் கொடுக்கிறோம். 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியை ஒருமுறை அமைத்து விட்டால் போதும்... பல ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும்.
அதிக அடர்த்தி கொண்ட பாலித்தீன் வாயிலாக செய்யப்பட்ட தொட்டி இது. இதற்கு பக்கத்தில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம் அமைக்க வேண்டும். டிரம்முக்கும், தொட்டிக்கும் குழாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.
இந்த தொட்டியை திறந்தவெளியிலும் வைக்கலாம். வெயில் பட்டாலும் பிரச்னையில்லை. ஆனாலும், பாதுகாப்பு கருதி நிழல் வலைகளை போர்த்தி விட்டுள்ளோம். அதுபோல் தரையிலும் வைக்கலாம்.
அதிக அடர்த்தி கொண்ட பாலித்தீன் தொட்டி என்பதால், எளிதில் கிழியாது. எதிர்பாராதவிதமாக லேசான கிழிசல் ஏற்பட்டாலும், பஞ்சர் ஓட்டுவது போல் ஓட்டி, சரி செய்துடலாம். முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகளுக்கு தாராளமாக தாங்கும்.
எங்களிடம் நாட்டு மாடுகள் ஐந்து உள்ளன. இடுபொருட்கள் தயாரிக்க, சாணம், சிறுநீர், மோர் உள்ளிட்ட பொருட்களை வெளியில் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை.
அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை மட்டும் வெளியில் இருந்து வாங்கிக் கொள்கிறோம். ரம்புட்டான், மங்குஸ்தான், லகான், அபியூ, ஜபாட்டிகா, அவகேடோ, பிரேசில் கிரேப், கேரளா நட்ஸ் என பல வித பழப்பயிர்களும், கருமஞ்சள், முருங்கை, ரோஜா, வெட்டிவேர் பயிர்களையும் விளைவிக்கிறோம்.
இங்கு விளையும் பழங்கள், காய்கறிகளை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விற்கிறோம். என் ஓய்வுக்காலத்தை பயனுள்ளதாக ஆக்குவதற்கு இந்த பண்ணை பெரிய அளவில் கை கொடுத்துட்டு இருக்கு.
தொடர்புக்கு:
80734 20855

