ADDED : ஏப் 20, 2024 05:08 AM

பெங்களூரு : ''கர்நாடகாவில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடப்பதால், 14 தொகுதிகளில் பிரசாரத்துக்கு வந்துள்ள தொகுதியை சேராத அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் வரும் 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு பின், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் அளித்த பேட்டி:
அமைதியான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த நாங்கள், நடவடிக்கை எடுத்துள்ளோம். வரும் 26ம் ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் 24ம் தேதி மாலை 6:00 மணியுடன் ஓய்கிறது.
அதன்பின், தொகுதியை சேராத அரசியல் தலைவர்கள், தொண்டர்களை வெளியேற்ற, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமண மண்டபங்கள், சமுதாய பவன்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்களை சோதனையிட வேண்டும். தொகுதியை சேராதவர்கள் அங்கு இருந்தால், அவர்களை வெளியேற்ற வேண்டும்.
தொகுதி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், வாகன சோதனையை பலப்படுத்த வேண்டும். வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும். அடையாள அட்டையை ஆய்வு செய்து, வாகனத்தில் இருப்பவர் தொகுதியை சேர்ந்தவரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

