ADDED : மார் 15, 2025 04:44 AM

சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. திருப்பதி மாடலில் சன்னிதானம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சபரிமலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக பக்தர்கள், 18 படிகளில் ஏறியதும் இடது பக்கம் திரும்பி, மேல் பாலத்தில் ஏறி மீண்டும் கோவிலின் வடக்கு பக்கம் இறங்கி தரிசனம் செய்து வந்தனர். சில வினாடிகள் மட்டுமே அவர்கள் சுவாமியை தரிசிக்கும் நிலை இருந்தது. இதனால் திருப்பதி மாடலில் கொடி மரத்திலிருந்து பக்தர்களை நேரடியாக தரிசனத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாக புதிதாக இரும்பு பாதை அமைக்கப்பட்டது. நடுவில் உண்டியலும், இரண்டு பக்கமும் பக்தர்கள் நடந்து செல்லவும் வசதி செய்யப்பட்டது. நேற்று இது சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது .
இதில் வந்த பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.
புதிய காப்பீட்டு திட்டம்
சபரிமலையில் தற்போது விபத்து காப்பீடு திட்டம் பக்தர்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வாயிலாக மரணம் அடைபவர்களுக்கும் எவ்வித பண பலனும் கிடைக்காமல் இருந்தது. இவ்வாறு இறக்கும் பக்தர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.